Wednesday, October 19, 2011

பார்க்காத சாரதி

சென்னையில் வாகனம் ஓட்டுபவர்கள் சில பல நெளிவு சுளிவுகளை கற்றிருக்க வேண்டும்.

பார்த்து ஓட்டுவதை விட பார்க்காமல் ஓட்டினால் நலம்.

நண்பன் காரில் side mirror இரண்டும் காணவில்லை. என்ன என்று கேட்டேன். "அதை யாராவது தட்டிட்டு போய்டுவாண்டா. அதான் எடுத்து வெச்சுட்டேன்." என்று ரொம்ப சாதாரனமாய் சொன்னான். நான் பல நாளாக mirror என்பது இரண்டு பக்கமும் பார்த்து ஓட்டுவதற்கு என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் புரிந்தது அது ஒரு அனாவசிய side bumper மாதிரி என்று. போகிற போக்கில் door இல்லாமல் கூட ஓட்டுவார்கள் போலிருக்கிறது. "யாராவது இடிச்சா dent ஆயிருமில்லியா?" என்பார்கள். Four wheeler கேள்விபட்டிருக்கிறேன். four wheel பைக் கொஞ்சம் கஷ்டம்தான்.

one way யில் காரில் போய்க்கொண்டிருப்போம் - எதிரில் பைக்கில் நண்பர் படு வேகத்தில் வருவார். நம்மை பார்த்ததும் திடுக்கிட்டு பிரேக் அடித்து - "டேய் பேமானி, wrong side ல வர்ராங்கன்னு தெரியுதில்ல, பாத்து ஓட்ட மாட்டியா?" என்று நியாயமான முறையில் கடிந்து கொள்வார். பைக் பின்னால் அமர்ந்திருப்பவர் மேலும் நியாயமாக " என்னாடா லுக் வுட்றே? இன்னா கார் இருந்தா பெரீய ஹீரோவா நீ?" என்று தாழ்மையாக கேட்டுக்கொள்வார்.

ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் பாஷா மாதிரிதான் பேசுவார்கள். படு வேகத்தில் லாரிக்கும் பஸ்சுக்கும் நடுவில் விரைவார்கள். நமது இரண்டு காதின் ஓரத்திலும் ஒரு லாரி டயரும் ஒரு பஸ் டயரும் ஓடிக்கொண்டே வரும். சத்தமோ காதை பிளக்கும். தலை சுற்ற ஆரம்பிக்கும். "பார்த்து போப்பா, ஒன்னும் அவசரம் இல்லை" என்போம் நாம். "அட இன்னா சார், தைரியம் இல்லாத ஆள் எல்லாம் எதுக்கு சார் ஆட்டோல வரீங்க?" என்று பளிச்சென்று பதில் வரும். வெகு விரைவில் கார் டிரைவிங் ஸ்கூல் மாதிரி ஆட்டோ passenger ஸ்கூல் வந்து விடலாம்.

"என் பையன் எல்லாத்திலும் புலி. பத்து வயசிலயே ஆட்டோல போக ஆரம்பிச்சிட்டான். எந்த டிரைவரும் அவனை ஒன்னும் பண்ண முடியலை. இறங்கற இடத்தில்தான் நிறுத்த சொல்வான்"

"சார் என் கவலையெல்லாம் என் பெரிய பையன்தான். ஒரு ஆட்டோ பாசன்ஜெர் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டான்னா அவன் பாட்டுக்கு ஆட்டோலே போயிட்டு வந்துக்கலாம்."

"என் பொண்ணு எல்லாத்திலேயும் சாமர்த்தியம், ஆட்டோ டெஸ்ட் கூட பாஸ் பண்னி வச்சிருக்காள். மாப்பிளையோடு ஆட்டோலேயே போயிட்டு வந்துக்கலாம்."
. .
டிராபிக் சிக்னலில் வாகனத்தில் (கார் என்று சொல்வதை avoid செய்வது நலம். இல்லாவிடில் அதற்கு ஒரு நான்கு நல்ல வார்த்தைகள் கேட்க வேண்டியிருக்கும்) நின்று கொண்டிருப்போம். இடது வலது பக்கங்களில் நிற்கும் பைக் நண்பர்களும் ஆட்டோ வீரர்களும் "வ்ர்ரூம்" "வ்ர்ரூம்" என்று ஆக்சிலறேடரை பிடித்து திருகி எடுப்பார்கள். புகை மண்டலம் விண்ணை தாண்டி வந்தே விடும். "லொக். லொக்.." என்று இருமலுக்கு நடுவே "ஏன்பா, அதான் சிக்னலில் அழகாக டைம் வேற காட்டறாங்களே இப்போ .. எதுக்கு இப்படி முறுக்கறீங்க?" என்றால் - " தோ பார்றா.. அந்த டயமே நாம ரெடி ஆவுறதுகுதானே காட்டறான்?" என்பார்கள்.

ஓட்டுவது ஒரு பிரச்சினையாக இருக்க - ஓட்டியபடி எக்ஸ்ட்ரா-car- ricular activity அடுத்த பிரச்சினை. ஓட்டிக்கொண்டிருக்கும்போதே திடீரென ஜன்னலில் பைக்கில் ஒரு கை ஆடும். "விண்டோ இறக்குபா". இறக்கி என்ன என்று விசாரித்தால் - " கோபாலபுரம் 3rd மெயின் தெரியுமா? " என்பார். "சாரி சார் தெரியாதே.." என்றால் - "இவனுக்கெல்லாம் ஒரு கார் தேவையா?" என்று நமது தேவைகளை முடிவு செய்வார்கள். மறுபடி கை ஆடும். "பெட்ரோல் பம்பு எங்கபா இங்க?" என்பார்கள் ஏதோ அதை சொல்லத்தான் நான் காரெடுத்து அந்த வழியாக வந்தது போல். நாமே அங்கு வழி விசாரித்து கொண்டிருப்போம். "சாரி சார், தெரியிலீங்களே .." என்போம். "அப்போ காருல என்ன தண்ணி வுட்டு ஓட்டுறியா? " என்று தனது நியாயமான சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள முயல்வார்கள்.

இதையெல்லாம் பார்த்து விட்டு என் நண்பன் காரை வீட்டிலேயே போர்த்தி வைத்து விட்டு எங்கு போனாலும் MRTS லேயோ QRST லேயோ போய் வந்து கொண்டிருக்கிறான்.

2 comments:

  1. வாயாரச் சிரித்தேன்.

    'அதான் ஒன்வேல வராங்கனு தெர்துல்ல? நீ ஓரமாப் போறது தானே?' என்று போலீஸ்காரரே சொல்லிக் கேட்டிருக்கிறேன். தேனாம்பேட் காங்கிரஸ் க்ரௌண்ட் பின்னால், நுங்கம்பாக்கம் ஹைரோடில் சில சந்துகள்.. என்று அப்போதெல்லாம் நிறைய குட்டி குட்டி ஒன்வே உண்டு. ஆனால் எல்லாருமே அதை மதிக்காமல் போவார்கள். போலீஸ்காரர் நிறுத்தி பணம் வாங்கிக் கொண்டு, ஏக மரியாதையோடு "அடிக்கடி வந்துட்டு போங்க" என்பார். ஒன்வேயை மதித்துப் போகும் என் போன்ற சிலர் மேல் போலீஸ்காரருக்குக் கோபம் வரும். "சாவுகிராக்கி.. ரெண்டு ரூபாய்க்கு வக்கில்லாம ஒதுங்கிப் போறான் பாரு" என்று கூசாமல் காதில் விழும்படி பேசுவார்கள். "ஏன்யா.. ஒன்வேனு போட்டா ஓடிற்றதா? எவன்யா லெசென்ஸ் குடுத்தான் உனக்கு?" என்று அடிப்படையாக சந்தேகப் படுவார்கள்.
    இன்னும் சில டைப்களும் உண்டு.
    போலீஸ்காரர் நிறுத்தி "இது ஒன்வே" என்பார்.
    "தெர்துல்ல? அப்ப நீ ஏன் எதுர்ல வந்தே?"
    போலீஸ்காரர் ஒரு முறை பார்த்துவிட்டு, "நீங்க போங்கண்ணே" என்று ஒதுங்கி வழிவிடுவார். பின்சீட்டில் உட்கார்ந்திருக்கும் என் போன்றவர்களுக்கு தொடை நடுங்கி நிற்க சில நிமிடங்களாகும்.

    //திடீரென ஜன்னலில் பைக்கில் ஒரு கை ஆடும்.
    சென்னையில் எல்லாமே எதிர்பாரா திடீர் தான். கழிவறைக்குச் செல்லும் போது ஒரு கை திடீரென்று நீண்டு 'ஒரு பகெட் தண்ணி கொண்டு வரீங்களா?' என்றது. சிறுவயது நினைவு இப்போதும் திடீர் சிரிப்பை வரவழைக்கிறது.

    ReplyDelete
  2. ஆட்டோ போக டெஸ்ட் வைக்கனும்னு சரியாச் சொன்னீங்க. ஆட்டோ பாஸஞ்சராதான் நான் நிறைய திட்டு வாங்கியிருக்கேன். ஒரு முறை புகை மண்டலத்திலிருந்து தப்ப மூக்கை கர்சீஃபால் மூடிக்கொண்டிருந்தேன். 'இப்பதான் ஃப்ளைட்லேர்ந்து இறங்கி வரீங்களா?' அப்படின்னார் ஆட்டோக்காரர். வெயிலுக்குக் கூலிங்க் க்ளாஸ் போட்டுண்டு போனதை ஒருத்தர் கிண்டல் செய்தார்.

    ReplyDelete