மெட்ராஸ் பல காலமாய் மரியாதைக்கு பெயர் போனது (டே, இன்னாடா நாயே, பெரீய ...ங்கியா? கஸ்மாலம். அறிவுகிதா உனுக்கு? பேமானி. மரியாதை கெட்டு பூடும் ஆமா.. என்று நல்லபடி வார்னிங் கொடுத்த பின்தான் மரியாதை கெடுப்பார்கள்). அதுவும் படித்தவர் மாதிரி இருந்தால் எக்ஸ்ட்ரா திட்டு விழும். "நாயே, பாத்தா பட்ச்சா மாறி கிற" என்பார்கள். ஏக புல்லாக சாராயம் போட்டு விட்டு தள்ளாடினால் மரியாதை தனிதான் "பாத்து போ ராசா ஓவரா போட்டுகினியா நைனா".
என் நண்பன் வீரா என்கிற வீரப்பன் பற்றி இங்கே சொல்ல வேண்டும். ஆள் ஆறடி, ஜிம் உடம்பு. ஆனால் உள்ளே பூ மாதிரி. எதற்கும் அஞ்சுவான். கல்கத்தாவில் பிறந்து பெங்காலித்து வளர்ந்தவன்.
சென்னை ஆடிட்டில் வந்தான் ஒரு முறை. வழக்கம் போல் நானும் அவனும் ஒரு சனிக்கிழமை அரை நாள் ஆபீஸ் முடித்து புஹாரியில் பிரியாணி சாபிட்டோம். பைக்கில் அவனை 12B பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு மவுண்ட் ரோட்டில் இன்னொரு நண்பனை பிக் அப் செய்ய பறந்தேன்.
அரை மணியில் திரும்பி வருகிற வழியில் வீரா வெல வெலத்து நாலைந்து பேய்கள் சேர்ந்து அறைந்தாற்போல் நின்றபடியே ஆடி கொண்டிருந்தான்.
வண்டி நிறுத்தி கேட்டேன்: என்னடா வீரா, என்னாச்சு?
வீரா: டேய், என்னடா ஊரு இது என்று ஆரம்பித்தான். நடந்தது இது:
பஸ் ஸ்டாண்டில் வீரா டி நகர் பஸ்சுக்கு நின்று கொண்டிருந்தான். ஒரு பஸ் வந்தது வழியே. பஸ் நின்றதும் வீரா உள்ளே ஏறி: சார், இது டி நகர் போகுதா?
கண்டக்டர்: டேய், குருட்டு நாயே, பாத்தா பட்ச்சா மாறி கிற.. பான்ட் சட்டை வேற மினுக்கிகினு வர... போர்டு பாத்து ஏற மாட்டியா? பெரிய லார்டு மாறி ஏறிட்டு கேள்வி வேற கேக்கிறியே? எருமை மாறி வளந்துகிரியே தவிர மண்டையிலே ஒன்னும் காணும். மரியாதை கெட்டுரும் எறங்கி ஓடி பூடு... சாவு கிராக்கி வந்து சேறுறானுங்க பாரு நமக்கு. பாக்கிறதுக்கு எச்சிகுட்டி பண்றது பேமானி வேல..
வீரா தபால் என்று குதிக்கிறான் .. பான்ட் சட்டை லேசாக கிழிந்து காலில் கொஞ்சம் சிராய்ப்பு.
: டேய், எங்க அப்பா கூட என்னை ஒரு வாட்டி திட்டினது கிடையாதுடா.. இந்த ஊரில வந்து எல்லா திட்டும் வாங்கிட்டேன். பஸ்ல ஏறினா இவ்ளோ பெரிய தப்பா?
அதற்கு பிறகு வீரா மெட்ராஸ் பக்கமே வருவதில்லை.
பல நாள் கழித்து கல்கட்டாவில் கேட்டான்:
: டேய் அது என்னடா அது எச்சிகுட்டி?
நான் சிரித்து சொன்னேன்: executive டா!
- விரைவில் நான் படித்த wharton எச்சிகுட்டி ப்ரோக்ராம் பற்றி எழுதுவேன்....
அதுவரை - மெட்ராஸ் தமிழில் அழகாக, ஒழுங்கா வூடு போய் சேருடா நாயே என்று சொல்லி விடை பெறுகிறேன்.
கவுண்டமணி ஒரு படத்தில் சொல்வாரே 'எனக்குப் படிச்சவன்னா அலர்ஜி' அப்படின்னு.
ReplyDelete